இருக்கும் வரை தமிழர்களுக்காக பாடுபடுவேன்: கருணாநிதி
காஞ்சிபுரம்:
வாழும் காலம் வரை தமிழர்களுக்காகவும், தமிழுக்காவும் பாடுபடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 82வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கருணாநிதிசிறப்புரையாற்றினார்.
இங்குள்ள மலைக்கு இரண்டு கழுகுகள் வருமாம். அவை இரண்டும் உணவு அருந்துகிற காட்சியைப் பார்க்க ஊரே கூடி நிற்குமாம். பக்தி அடிப்படையில் இந்தகழுகுகள் வருகிறதா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் இப்போது அந்த கழுகுகள் வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்.
எனவே அவை பக்தி மார்க்கத்தில் வரவில்லை, ஏதோ ஒரு வழக்கத்தில் வந்துள்ளன என்பதை பகுத்தறிவைப் பயன்படுத்தி நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். மக்கள்விழிப்படைய வேண்டும். பகுத்தறிவைப் பெற வேண்டும்.
3 லட்சம் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமண உதவியை வழங்கியது திமுக ஆட்சி. 100 இடங்களில் உழவர் சந்தைகளைத் திறந்தோம். இவை எல்லாம் என்னஆனது என்பது மக்களுக்குத் தெரியும். ஏதாவது ஒரு உழவர் சந்தையை இப்போது, இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறதா?
ஏற்கனவே இருந்து வந்ததை ரத்து செய்து விட்டு இப்போது மீண்டும் அவற்றை கொடுத்து வருகிறார்கள். இதை நம்பி நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.
இடைத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் எதிர்காலமே இல்லை என்கிறார்கள். அப்படியே வெற்றி பெறாவிட்டால் உங்களை விட்டு என்னால் விலகிப்போய் விட முடியுமா? பெரியாரும், அண்ணாவும் அதையா எனக்கு சொல்லித் தந்துள்ளார்கள்?
நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினீர்கள். அதற்கு என்ன அர்த்தம்? சொத்து, சுகத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றா அர்த்தம்?இல்லைதமிழர்களுக்காக நீண்ட காலம் உழைக்க வாழ வேண்டும் என்று தான் அதற்கு அர்த்தம்.
நான் இருக்கும் வரை, அது வருடங்களோ, மாதங்களோ அல்லது நிமிடங்களோ, இருக்கும் வரை தமிழர்களுக்காக பாடுபடுவேன், உழைப்பேன். தமிழர்களுக்காகஉழைக்க எனக்கு பக்க பலமாக இருங்கள் என்றார் கருணாநிதி.