வாஞ்சிநாதனுக்கும் மணி மண்டபம்: குமரி அனந்தன் கோரிக்கை
சென்னை:
வீர வாஞ்சிநாதனுக்கும் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எத்தனை நினைவிடங்கள், மணி மண்டபங்கள் அமைத்தாலும் தகும். இரட்டைமலை சீனிவாசன், வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கனார், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்கு மணி மண்டபம் அமைக்கவும்,
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு நெல்லையில் மணிமண்டபம் எழுப்பியுள்ளதையும் போற்றுகிறேன். அந்த மாபெரும் தியாகியை நாடு கடத்தவும், இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கவும் காரணமாய் இருந்த வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றவன் வீர வாஞ்சிநாதன்.
அவருக்கு செங்கோட்டை பூங்காவில் மணி மண்டபம் கட்ட பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்கு எதிராக கிளம்பிய சிலர் அடிக்கல்லையேபெயர்த்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால் அத்திட்டம் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அந்த மணிமண்டபத்தை எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல, செண்பகராமன் நூற்றாண்டின்போது சட்டசபையில் செண்பகராமனின் வீரசாகசங்கள் குறித்து நான் பேசிய போது, பொருத்தமான இடத்தில் சிலைவைப்பதாக ஜெயலலிதா உறுதியளித்தார். அதையும் இப்போது மனதில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் குமரிஅனந்தன்.












Click it and Unblock the Notifications