புலிகள்: ஜேவிபிக்கு சந்திரிகா கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என்று ஜனதா விமுக்தி பிரமுனா கட்சிக்கு இலங்கைஅதிபர் சந்திரிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சந்திரிகா அரசுக்கு ஆதரவளித்து வரும் முக்கிய கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா (ஜேவிபி) இந்த விவகாரத்தில் சந்திரிகா அரசுக்கு கடும் மிரட்டல் விடுத்துவருகின்றன. விடுதலைப் புலிகளுடன் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அக்கட்சி கூறியது.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் ஜேவிபிக்கு 39 இடங்கள் உள்ளன. எனவே இக்கட்சி நினைத்தால் சந்திரிகா அரசை கவிழ்த்து விடலாம்.
இந் நிலையில் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கும் முடிவை எதிர்ப்பது தவறு. இதுநாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சமமாகும்.
அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூறுவது மிரட்டல் விடுக்கும் செயலாகும்.ஜேவிபியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம்நலிவடைந்துள்ளது. பணவீக்க சதவீதம் 18.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜேவிபி ஆதரவளித்தால் பணவீக்கம் 10 சதவீதத்திற்குள் குறைந்து விடும் என்றார் சந்திரிகா.