கோவை குண்டுவெடிப்பு: விசாரணை அதிகாரி திடீர் சாவு
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்பி முருகேஸ்வரன் திடீர் என மரணம் அடைந்தார்.
இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவர் முருகேஸ்வரன்.
கோவை வட வள்ளி பகுதியில் வசித்து வந்த முருகேஸ்வரன், திங்கள்கிழமை காலை தனது வீட்டில் இருந்து போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள தனதுஅலுவலகத்திற்கு ஜீப்பில் வந்தார். ஜீப்பிலிருந்து இறங்க அவர் எத்தனித்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை அதே ஜீப்பில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்தார்.
மிகவும் திறமை வாய்ந்த அதிகாரியாக விளங்கியவர் முருகேஸ்வரன். சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான இமாம்அலியை முருகேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர்தான் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு டி.எஸ்.பியாக இருந்த அவர் கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றார்.
2001ம் ஆண்டில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கோவை குண்டுவெடிப்பு வழக்கை அவர் தான் விசாரித்துவந்தார்.
முருகேஸ்வரன் உடலுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. சுப்பிரமணியம், கோவை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications