அரசியலை விட்டு வெளியே வாருங்கள்: ஆளுநர்களுக்கு கலாம் அட்வைஸ்
டெல்லி:
மாநில ஆளுநர்கள் அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபடாமல் அரசியலை விட்டு வெளியே வந்து நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று டெல்லியில் இன்று தொடங்கிய ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
தமிழகம் உட்பட அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாநாட்டிற்குதலைமை வகித்தார்.
மேலும் பிரதமர் மன்மோகன்சிங், ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசுகையில், நமது நாட்டில் ஆளுநர்களுக்கு சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர்களின்அலுவலகம் அந்தந்த மாநிலங்களின் நலன்களை பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்.
அரசியல் பணிகளோடு மட்டும் நீங்கள் ஒதுங்கி விடாமல் அரசியலை விட்டு வெளியே வந்து நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பாலமாக செயல்பட வேண்டும்.
நாட்டுக்கு தீவிரவாதிகள் மூலம் தற்போது பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. நான் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளுக்கும் சென்றுபார்வையிட்டுள்ளேன். நமது ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிகளை மிக தீவிரமாக பாதுகாத்து வருகிறார்கள்.
தீவிரவாத செயல்களை எந்தக் காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது. அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது மிகவும் அவசியம்.
இன்றைய குழந்தைச் செல்வங்கள் தான் நாளைய நமது நாட்டின் எதிர்காலம். எனவே அவர்களுக்கு சிறப்பான கல்வி கொடுப்பது மிகவும் அவசியம் என்றார்.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலைமை, சுனாமி போன்ற பேரழிவு மேலாண்மை நிர்வாகம்,பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதில் கவர்னர்களை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வது, நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்பு நிலவரம் பற்றி விவாதிக்கப்படஉள்ளது.