ஜெவை சந்திக்க ராமதாஸ் திட்டம்? உளவுத்துறை பரப்பும் புருடா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் ராமதாஸும், தானும் சந்திக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை, தமிழக உளவுப் பிரிவு பரப்பியுள்ள வதந்தி என அகில இந்திய மூவேந்தர் மூன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேதுராமன், திருமாவளவன் ஆகிய மூன்று அரசியல் கட்சித் தலைவர்களும் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுடன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு தமிழர் தலைவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேதுராமனிடம் கேட்டபோது, இந்த செய்தியே பொய்யானது. நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதால் எங்களைப் பிரிக்க ஜெயலலிதா சதி செய்கிறார்.
அதற்கு தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு போலீஸார் மிகத் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அதன் விளைவுதான் இந்த வதந்தி. இதில் சற்றும் உண்மையில்லை. இது போலீஸ் வேலை.
என்னைப் பலிகடாவாக்கி கூட்டணியை உடைக்க நினைக்கிறார்கள். அது பலிக்காது. எங்களைப் பிரிக்க முடியாது. கடந்த 5 வருடங்களாக நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதிதான்.
எங்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பதாக கருணாநிதி கூறிய நிலையிலும் கூட தொடர்ந்து அவருடன்தான் இருந்து வருகிறோம்.
பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக கூட்டணி திகழ்வதால்தான் அதை உடைக்க வதந்திகளை பரப்பி வருகிறது உளவுப் போலீஸ்.
ஜெயலலிதாவை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவே இல்லை. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏதாவது கோரிக்கை இருந்தாலும் கூட நாங்கள் ஜெயலலிதாவை சந்திக்கப் போக மாட்டோம்.
திருமாவளவனைத் தான் அனுப்பி வைப்போம். நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம். அப்படி ஒரு எண்ணமே எங்களுக்கு இல்லை என்றார் சேதுராமன்.












Click it and Unblock the Notifications