மதுரை to
மதுரை:
மதுரையிலிருந்து சென்னைக்கு விடப்படும் பாசஞ்சர் ரயில் வெறும் கண் துடைப்பு என்று மதுரை மக்கள் கொந்தளிப்புடன் கூறுகிறார்கள்.
மதுரையிலிருந்து சென்னைக்கு (அதாவது உண்மையில் விழுப்புரம் வரைதான்) பாசஞ்சர் ரயில் விடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.இந்த ரயிலுக்கு மதுரை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் உருவாகியுள்ளது.
வரும் 16ம் தேதி முதல் இந்த ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கட்டை வண்டி எங்களுக்குத் தேவையில்லைஎன்று மதுரை மக்கள் குறலுடன் கூறுகிறார்கள்.
ரயில்வேயின் இந்த முடிவு மக்களை முட்டாளாக்கும் ஒரு செயல் என்கின்றனர்.
வெறும் 64 ரூபாய்தான் கட்டணம் என்றாலும் கூட அதற்காக பயணிகளை 20 மணி நேரம் பயணிக்க வைத்து அந்தக் காலத்துக்குக் கொண்டு போகக்கூடாது என்கின்றனர் பயணிகள்.
சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் ஒரு ரமேஷ் என்ற பயணி கூறுகையில், மதுரையில் இரவு 11.30 மணிக்கு இந்த ரயில் கிளம்புமாம் சார்.ஒவ்வொரு ரயில் நிலையமாக நின்று நின்று அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை அடையும்.
அங்கு சில மணி நேரம் காத்திருந்து, இணைப்பு ரயிலைப் பிடித்து சென்னைக்கு செல்ல வேண்டும்.
இப்படி சுமார் 20 மணி நேரத்தை வீணடித்து யாராவது சென்னைக்குப் போக விரும்புவார்களா?.
குறைந்த பயணக் கட்டணம் வாங்குவதால் இப்படி பயணிகளை கொடுமைப்படுத்த ரயில்வே நினைக்கலாமா? இந்த ரயிலால் யாருக்குமேலாபமில்லை என்றார் குமுறலுடன்.
இந்தப் புதிய ரயிலால் டீசல் செலவும், பயண நேரமும் அதிக அளவில் விரயமாகும் என்பதால் ரயில்வேயும் கூட கவலையுடன்தான் உள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை தலைவர் ரத்தினவேல் கூறுகையில், உண்மையில் மதுரைக்கும், சென்னைக்கும் இடையே பாஸ்ட் பாசஞ்சர் ரயில்வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டோம். ஆனால் வெறும் பாசஞ்சர் ரயிலை கொடுத்துள்ளார்கள்.
குறைந்த கட்டணத்தில் பாஸ்ட் பாசஞ்சர் ரயில் இருந்தால் நடுத்தர வர்க்க பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்குமே என்ற நோக்கில்தான் நாங்கள்கேட்டோம். ஆனால் அந்த நோக்கத்தையே சிதறடிக்கும் வகையில் சாதாரண பாசஞ்சர் ரயிலை ரயில்வே கொடுத்துள்ளது. இது யாருக்குமே பலன்தராது என்றார்.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ராஜசேகர் கருத்து தெரிவிக்கையில், இந்த ரயிலால் நஷ்டம் ஏற்படும், பலன் இருக்காது என்றுகூறுவதை ஏற்க முடியாது. இப்போதைக்கு இரவில் மட்டுமே ரயில் போக்குவரத்தை நடத்த முடியும். பகல் நேர ரயிலுக்கு வாய்ப்பில்லை.
மேலும், இரவில் பயணம் செய்வதையே பயணிகள் அதிகம் விரும்புவார்கள். இந்த ரயில் போக்குவரத்தை மதுரை மற்றும் திருச்சி கோட்டஅதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். தேவைப்படும் திருத்தங்கள் குறித்து ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரைப்போம் என்றார்.
ஜூன் 16ம் தேதி முதல் இந்த கட்டை வண்டி ரயில் தனது பயணத்தைத் தொடங்க இருக்கிறது.
வேலை வெட்டி இல்லாதவர்கள், அப்படியே ஒரு 200 ரூபாயை எடுத்துக் கொண்டு 3 நாட்களை இந்த ரயிலிலேயே ஓட்டிவிட்டு திரும்பி வரலாம்.