போலீஸ் காவலில் "திருட்டு போலீஸார்
சென்னை:
கொள்ளையில் ஈடுபட்டபோது பிடிபட்ட மதுரை போலீஸார் 2 பேர் உள்ளிட்ட கொள்ளைக் கும்பலை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னைநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சென்னையில் நகைக்கடைகாரர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு பணம் பறிக்க முயன்ற மதுரை பகுதியைச் சேர்ந்த போலீஸர் மீனாட்சி சுந்தரம், பன்னீர்செல்வம், பாஸ்கர்உட்பட எட்டு பேரை சென்னை யானைக்கவுனி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தமிழ்நாட்டில் நடந்த மேலும் பல கொள்ளைகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வடக்குஇணை கமிஷனர் சைலேந்திர பாபு மேற்பார்வையில் பூக்கடை உதவி கமிஷனர் தயாநிதி, யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் கவிக்குமார் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய மீனாட்சி சுந்தரம் என்ற போலீஸ்காரர் தவிர பன்னீர் செல்வம், பாஸ்கர் ஆகிய 2 போலீசார் உட்பட 7பேரும் நீதிபதி ஹரிதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். ஆனால் நீதிபதி ஹரிதாஸ் வருகிற வெள்ளிக்கிழமை 4 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
2 போலீஸ்காரர்கள் உட்பட 7 பேரும் போலீஸ் காவலில் செல்ல மறுத்தனர். ஆனால் நீதிபதி அதை ஏற்கவில்லை.
இதையடுத்து 7 பேரும் உடனடியாக சென்னை ஏழு கிணறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு உதவி கமிஷனர் தயாநிதி மேற்பார்வையில்நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ்காரர் மீனாட்சி சுந்தரம் இன்று காவலில் எடுக்கப்படுகிறார்.
பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு:
இதற்கிடையே 3 போலீஸாரின் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்திய போலீஸ் படை, இவர்கள் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து தற்போது ஆய்வுமேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் வாங்கிய சொத்துக்கள் குறித்து திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று காலை முதல் போலீஸார்ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications