சொத்துக் குவிப்பு: கண்ணப்பன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன் (இப்போது ராஜ கண்ணப்பன்), சுந்தரம், கோமதிசீனிவாசன் உட்பட 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 7 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன் பேரில் குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தக் குற்றப் பத்திரிகைகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். கண்ணப்பன் மீதான குற்றப் பத்திரிகை மட்டும்சென்னை சிங்காரவேலர் மாளிகையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேர் மீதான குற்றப் பத்திரிகைகள் அந்தந்த மாவட்டநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவை சரிபார்க்கப்பட்ட பிறகு விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவரும், மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவருமான கண்ணப்பன் மீது தான் அதிகப்படியானகுற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11 கோடி சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.