இளங்கோவனை நான் தூண்டி விடவில்லை: கருணாநிதி
சென்னை:
மொழிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிய கருத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை நான் தூண்டிவிடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இளங்கோவன் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதற்கும் ஒரு படி மேலே போய், தமிழரல்லாத இளங்கோவன்தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை கொச்சைப்படுத்துவதை சும்மா விட மாட்டோம் என்று பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்த சர்ச்சையில் புதிய திருப்பமாக, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். பாமகவுடன் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தில் தீவிரமாக இடம் பெற்றுள்ள திருமாவளவன்,
திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் காரணமாகவே இளங்கோவன் அவ்வாறு பேசியதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இது கூட்டணியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
திருமாவளவன் பேட்டிக்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொழிப் பிரச்சினை தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய கருத்துக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்போ இல்லை. இந் நிலையில்இளங்கோவனை அவ்வாறு பேசத் தூண்டியது நான் தான் என்று திருமாவளவன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது துளிக்கூட உண்மை இல்லாத பொய்செய்தி.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க ஆர்வம் கொண்டுள்ள என்னை, தமிழுக்கு எதிராக சித்தரிக்கமுயல்வதை, தமிழர்களும், தமிழார்வம் கொண்டவர்களும் நம்ப மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள்.
ராமதாஸின் தமிழ் போராட்டங்களால் எரிச்சலடைந்து, அவருடன் எனக்கு சுமுக உறவு இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறுஅவர் கூறியிருப்பது, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைப் பிரிக்க துடிக்கும் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் மோசடிச் செயலாகும் என்றுகருணாநிதி கூறியுள்ளார்.
பாமக மற்றும் திமுகவுக்கிடையே உரசல் ஏற்பட்டுள்ளதை தெளிவாக்கும் வகையில் கருணாநிதியின் நேற்றைய மற்றும் இன்றைய அறிக்கை தெள்ளத் தெளிவாகவிளக்குகிறது. மேலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகளுக்கிடையே நிலவும் உரசல்களையும் வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.