தர்மபுரி பஸ் எரிப்பு: சன் டிவி நிருபர்கள் சாட்சியம்
சேலம்:
தர்மபுரியின் வேளாண்மைக் கல்லூரி மாணவிகளை அதிமுகவினர் பஸ்ஸோடு சேர்த்து உயிரோடு எரித்துப் படுகொலை செய்தவழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சன் டிவி நிருபர்கள் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் சாட்சியம் அளித்தனர்.
தர்மபுரி அருகே கோவை வேளாண் கல்லூரி பேருந்துக்கு தீவைக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3மாணவிகளும் இறந்தனர். இதுதொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, போது சன் டிவி செய்தி ஆசியர் ராஜா, செய்தியாளர்கள்சிவராமன், மணி ஆகியோர் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்டிருந்தனர்.
நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில், அவர்கள் சாட்சியம் அளித்தனர்.
சன் டிவி சென்னை செய்தியாளர் சிவராமன் சாட்சியம் அளிக்கையில், ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஹோட்டலில் தண்டனைவழங்கப்பட்ட செய்தியை தான் டிவிக்கு அளித்ததாக தெரிவித்தார்.
சன் டிவியின் தர்மபுரி செய்தியாளர் மணி கூறுகையில், தர்மபுரி ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே சாலை மறியல் நடப்பதாககேள்விப்பட்டு அங்கு சென்றதாகவும், பின்னர் இலக்கியம்பட்டியில் பஸ் எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததால் அங்கு சென்று பஸ்எரிந்தபோது அதை வீடியோ படம் எடுத்ததாகவும் தெவித்தார்.
பின்னர் அவர்களிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது. இன்றும் இந்த வழக்கில் நிருபர்கள் சாட்சியளிக்கின்றனர்.