சேது சமுத்திரத் திட்டம்: இலங்கையின் மிரட்டல்!
கொழும்பு:
சேது சமுத்திரத் திட்டத்தை இந்தியா நிறைவேற்றினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று இலங்கைவெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் லட்சுமண் கதிர்காமர் பேசுகையில், இலங்கை அரசிடம் முன் கூட்டியே ஒப்புதல் பெறாமல் சேதுசமுத்திரத் திட்டப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.
சேது சமுத்திரத் திட்டத்தால் இரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சவாலுக்குரியதாகி விடும். இத்திட்டம் ஏற்படுத்தப்போகும் எதிர்மறை விளைவுகள் குறித்து இலங்கையுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என பலமுறை கேட்டிருந்தோம்.ஆனால் இதுவரை இந்தியா இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளது.
இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அப்படி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என இந்திய அரசுஉறுதியளித்துள்ளது.
ஒருவேளை இலங்கையின் கவலைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாவிட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டால்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசு தயங்காது. சர்வதேச நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடுவோம்என்றார் கதிர்காமர்.