கூட்டணியை மாற்றினால் தப்பா? ராமதாஸ் கோபம்
சென்னை:
ஒவ்வொரு தேர்தலின் போதும், கொள்கையின் அடிப்படையில் கூட்டணியை மாற்றுவதில் தப்பேதும் இல்லை என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொள்கைக்கு உடன்பட்டு வரும்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? தேர்தல் சமயத்தில் தான் கூட்டணியை அமைக்கமுடியும்.
எனவே அந்த சமயத்தில் பொருத்தமான கூட்டணிக்கு மாறுவதில் தவறு கிடையாது. மற்றவர்கள் இதைச் செய்தால் யாரும் குறைசொல்வதில்லை. ஆனால் பாமக செய்தால் மட்டும் சந்தர்ப்பவாதம் என்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பல கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியில் இருக்கும்போது, கொள்கை அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தனித் தனியேபோராடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதை வைத்துக் கொண்டு கூட்டணிக்குள் குழப்பம் என்று கூறக் கூடாது.
எங்களது கூட்டணி வலுவாகவே உள்ளது. சட்டசபைத் தேர்தலை ஒன்றாகவே சந்திப்போம். கூட்டணிக்குள் பிளவு என்றுஅதிமுக அரசு புரளியைக் கிளப்பி, கூட்டணிக்குள் விரிசல் என்பது போன்ற மாயையை உருவாக்க நினைக்கிறது.
அதிமுக அரசு அகல வேண்டும். அப்போது தான் தமிழக மக்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். வருகிற சட்டசபைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக அரசு ஏராளமான ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. இது மக்களுக்குத் தெரியாமல்போய் விட்டது என்று கூறினார் ராமதாஸ்.