வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர்கள் கைது
கோவை:
பொள்ளாச்சி அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை பொதுமக்கள் வளைத்துப்பிடித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தாராபுரம் ரோட்டில் உள்ளது சுந்தரகவுண்டனூர். இங்கு தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கி உள்ளது. இதன் அருகேயே ஒரு ரேஷன் கடையும் உள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல் ரேஷன் கடை சுவர்மீது ஏறி உள்ளே புகுந்தனர். ரேஷன் கடை சுவரில் துளை போட்டு வங்கிக்குள் நுழைவது என்பது இவர்களது திட்டம்.
கொள்ளைக் கும்பல் ரேஷன் கடை சுவர் வழியே செல்வதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து விட்டனர். உடனே மேலும் சிலஊர் மக்களை அவர்கள் திரட்டினர். ஊரே திரண்டு வங்கியை முற்றுகையிட்டது.
வங்கியின் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரேஷன் கடையைத் திறந்தார். ஆனால் அங்குயாரும் இல்லை. இதனால் ஊர் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனாலும் ரேஷன் கடைக்குள் நன்றாகப் பார்த்த போது சாக்கு மூட்டைக்குள் 3 பேர் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. உடனேபொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்களது பெயர் சதீஷ் (வயது 30), செந்தில் குமார்(வயது 20), சிலம்பரசன் (வயது 20) என தெரியவந்தது. இவர்களில் செந்தில் குமார், சதீஷ் ஆகிய இருவரும் கோவையிலுள்ளஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினீயரிங் மாணவர்களே வங்கியிகல் கொள்ளையடிக்கமுயன்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications