சேது: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது- டி.ஆர். பாலு
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர்.பாலு கூறினார்.
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கவலை தெரிவித்திருந்தார்.
இந்தியாவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இறுதிக்கட்ட முயற்சியாக சர்வதேச நீதிமன்றத்தை இலங்கை அணுகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை நிபுணர்கள் 2முறை இந்தியா வந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தி சேது திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துவைத்தோம்.
சேது கால்வாய் திட்டம் இலங்கைக்கு பாதகமாகவோ, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவோ இருக்கும் என்றுகருதவில்லை. இந்திய எல்லைக்குள் சேது கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களைகேட்ட பிறகே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கோ, இலங்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் பாலு.
இதற்கிடையே இலங்கையிலிருந்து நிபுணர் குழு விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து பேச்சுநடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.