விஜயகாந்த் கட்சியில் சேரக்கூடாது: திருமாவளவன்
கடலூர்:
விஜயகாந்தின் கட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் சேரக்கூடாது என்று அக்கட்சியின்அமைப்பாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டில் இன்று விடுதலைசிறுத்தைகள் இயக்கம் ஒரு பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது. ஆனால் நமது இயக்கத் தோழர்களுக்கு கட்டுப்பாடுஇனியும் வரவில்லை.
கட்சி நிர்வாகிகள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று இருக்கிறார்கள். சிலர், நமக்கு இயக்கத்தில் பொறுப்பு இல்லை,எதற்காக இயக்கத்திற்கு பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இன்று நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றாலே காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறார்கள். விரைவில்சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் நம்முடைய இயக்கத்தை உடைக்கப் பார்ப்பார்கள். அதில் யாரும் சிக்கி விடக்கூடாது.
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார். சினிமா கவர்ச்சியில், மாயவலையில் நமது இயக்கத் தோழர்கள்யாரும் அந்தக் கட்சிக்கு சென்று விடக்கூடாது. இதை விடுதலை சிறுத்தை இயக்க நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் நமது இயக்கத்தை எந்த அரசியல் கட்சி முறைப்படி அங்கீகரிக்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி.இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றார் திருமாவளவன்.