ராஜிவ்: 2 இலங்கை தமிழர்கள் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
ராஜிவ் கொலை வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகிய விடுதலைப் புலிகளை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துவெளியிட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கை பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டு விசாரணைக்குழுவின் தலைவராக சிபிஐ இயக்குனர் உள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25ம் தேதி விடுதலைசெய்தது.
இதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், லிங்கமும்,வசந்தனும் ராஜிவ் கொலையாளிகளுக்கு பல வகையிலும் உதவிகள் புரிந்துள்ளனர். கொலைக்கு இவர்களது உதவியும் முக்கியகாரணமாக இருந்துள்ளது. எனவே இவர்களது விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் விடுவித்து சென்னைஉயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதே நேரத்தில் இந்த இருவர் மீதும் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல்செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்தனும் லிங்கமும் 1999ம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள இலங்கைஅகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அனுமதியில்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.