எம்ஜிஆர் பெயரில் தொகுதியா?: திமுக எதிர்ப்பு
சென்னை - நாகர்கோவில்:
சென்னையில் புதிதாக எம்.ஜி.ஆர். நகர் என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள சட்டமன்றத் தொகுதிக்குப் பதிலாக கே.கே. நகர்என்ற பெயரில் தொகுதியை உருவாக்குமாறு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழக சட்டசபைத் தொகுதிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில்பல தொகுதிகள் ரத்தாகின்றன. அந்தத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகள் வேறு தொகுதிகளுடன் சேருகின்றன.
சென்னையில் எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி என இரு புதிய தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.
இதன் மூலம் சென்னை தொகுதிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்கிறது.
இந் நிலையில் டெல்லியில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க திமுகபிரதிநிதிகள், புதிதாக உருவாக்கப்படும் தொகுதிகளுக்கு பெயர் சூட்டும்போது அதில் அடங்கியுள்ள பெரியபகுதி அல்லது அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியின் பெயரைத் தான் சூட்ட வேண்டும் என்று கோரினர்.
எம்ஜிஆர் வேண்டாம்... கே.கே. நகரே சரி:
இதன் அடிப்படையில் புதிய தொகுதிக்கு எம்ஜிஆர் நகர் என்று பெயர் சூட்டுவதற்குப் பதிலாக அந்தத்தொகுதியில் அடங்கியுள்ள பெரிய பகுதியான கே.கே. நகரின் (கலைஞர் கருணாநிதி நகர்) பெயரை சூட்டவேண்டும் என்றனர்.
ஆனால், இதற்கு அதிமுக பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொகுதிக்கு எம்ஜிஆர் பெயரே சூட்டப்படவேண்டும் என்றனர்.
வாதிட்ட திமுக:
திமுக பிரதிநிதிகள் தங்களது வாதத்தை எடுத்து வைத்தபோது, கே.கே.நகர் தான் பெரிய பகுதி. மக்கள்தொகையும் இப் பகுதியில் அதிகம். இங்கு 4 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இந்தத் தொகுதியில் அடங்கியசிறிய பகுதி தான் எம்ஜிஆர் நகர். அப்படியிருக்க அந்தத் தொகுதிக்கு எம்ஜிஆர் தொகுதி என்று எப்படி பெயர்சூட்ட முடியும். அதற்கு கே.கே. நகர் என்றே பெயரிட வேண்டும் என்றனர்.
இது போன்ற புள்ளி விவரங்கள் ஏதும் எடுத்து வைக்காத அதிமுக பிரதிநிதிகள், எம்ஜிஆர் பெயர் தான் வைக்கவேண்டும் என்றனர்.
பத்மநாபபுரத்தில் பந்த்:
இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதி ரத்து செய்யப்படுகிறது. இதனை திருவட்டார் மற்றும் குளச்சல் தொகுதிகளுடன்பிரித்து இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பத்மநாபபுரம் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம், தாலுகா அலுவலகம், பல்வேறு அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள தங்களது தொகுதியை ரத்து செய்யக் கூடாது. தொடர்ந்துபத்மநாபபுரம் தொகுதி நீடிக்க வேண்டும் என்று கோரி இன்று காலை முதல் இத்தொகுதியில் பந்த் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆட்டோ,வேன் எதுவும் ஓடவில்லை. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. ஓரிரு அரசுப் பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன.கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
தக்கலை, அழகிய மண்டபம், குமாரபுரம் உள்பட தொகுதியின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தொகுதியை கலைக்கக் கூடாது என்று கோரி அத்தொகுதி மக்கள் நேற்று முழு அடைப்பு நடத்தினர்என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பந்த்தின்போது ஒரு அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பிற்பகலுக்கு மேல் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
அதே போல நெல்லிக்குப்பம் தொகுதியை ரத்து செய்துவிட்டு அதை புதிதாக உருவாக்கப்படும் நெய்வேலி தொகுதியில் இணைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதற்கு நெல்லிக்குப்பம் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, எதிர் வரும் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் புதிய தொகுதிகள் நடைமுறைக்கு வராது என்று தெரிகிறது. இப்போதுள்ளதொகுதிகள் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.