கபினியிலிருந்து 40,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர்:
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், கபினி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வயநாடு மற்றும் கர்நாடகத்தின் குடகு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 3நாட்களாக இந்த கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி அணையிலிருந்து விநாடிக்கு 40,000 கன அடி நீரைகர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
அணையைக் பாதுகாப்பதற்காகவே அணை திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கபினி அணைஏற்கனவே நிரம்பி விட்டது. தற்போது அணைக்கு விநாடிக்கு 29,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதேபோல இன்னொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 21,000 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த அணையின் நீர் இருப்பு 100 அடியைத் தாண்டியுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 140 அடியாகும்.
மற்றொரு முக்கிய அணையான ஹோரங்கி ஏற்கனவே நிரம்பி விட்டது. இப்படி கர்நாடக அணைகள் அனைத்திலும் நல்லநிலையில் தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்துபிடிவாதமாக இருந்து வருகிறது.