லண்டன்: கேரளாவில் தயாரான பெட்டிகளில் வந்த குண்டுகள்
திருவனந்தபுரம்:
கடந்த வாரம் லண்டனில் நடந்த தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் கொண்டு வர பயன்படுத்தப்பட்டபிளாஸ்டிக் பெட்டிகள் கேரளாவில் தயாரானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 2வதுமுறையாக நடந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை செய்த போது தீவிரவாதிகள் வெடிகுண்டு கொண்டு வரப் பயன்படுத்தியபிளாஸ்டிக் பெட்டிகளின் சில பகுதிகள் கிடைத்தன. இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய போது அது பேபிலி பிளாஸ்டிக்அன்ட் தெர்மாவேர் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை என தெரிய வந்தது.
இந்த நிறுவனம் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள மனவிளையில் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள் இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட டெல்டா 6250 என்ற 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பெட்டியில்வைக்கப்பட்டு தான் குண்டுகள் கொண்டு வரப்பட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4பேர் கைது:
இது தொடர்பாக திருவனந்தபுரத்திலுள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சின்சன் பெர்னாண்டோவிடம் ஸ்காட்லாண்ட்யார்ட் போலீஸார் தொடர்பு கொண்டு விசாரணை செய்துள்ளனர்.
இது குறித்து சின்சன் கூறுகையில், எங்களது நிறுவனம் தயாரித்த பெட்டியில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதுஅதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றார்.
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸார் திருவனந்தபுரம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய விவரம் இந்திய உளவுத்துளைறக்கோ, கேரள அரசுக்கோ தெரியாது. தற்போது தான் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பாக லண்டன் போலீஸார் இன்று 4 பேரை கைது செய்தனர். பர்மிங்ஹாமில்வைத்து இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.