காவிரி பிரச்சினையில் அரசியல் வேண்டாம்: தேவ கெளடா
சென்னை:
காவிரி பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று சென்னையில் நடந்த ஒரு பள்ளி விழாவில் முன்னாள் பிரதமர் தேவகெளடா கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்ய தேசியஅளவிலான கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும்.
மாநிலத்துக்கு மாநிலம் கல்விக் கொள்கையில் மாறுபாடு இருக்கிறது.கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்வியும், நடுநிலைக்கல்வியும் மோசமாக இருக்கிறது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே சமமானநிலை இல்லை. இது சமூகத்திற்கு நல்லதல்ல என்றார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தரம் சிங்கின் கூட்டணி அரசில் என்னுடைய கட்சியும் உள்ளது. கர்நாடகஅணைகளில் நீர் இருப்பு குறித்து இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் எந்த பிரச்சினையும் தேவையில்லை. கபினி அணையிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அங்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாது.
காவிரி விவகாரம் இரண்டு மாநில விவசாயிகளுக்கு இடையேயான வாழ்வா சாவா பிரச்சினை. இதை அரசியலாக்கவிரும்பவில்லை. இது விவசாயிகளின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதால் ஆவேசத்தை உருவாக்கக் கூடாதுஎன்றார்.