ஜெமினி கணேசனுக்கு தபால் தலை: தயாநிதி மாறன்
சென்னை:
மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு விரைவில் நினைவு தபால்தலை வெளியிடப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலையின் 200வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவு தபால் தலைசென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த இந்த மத்தியஅரசு நிகழ்ச்சியில், திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி தபால் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொங்கு வேளாளர் அமைப்புகளைச்சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தீரன் சின்னமலையின் தீரச் செயல்களை கருணாநிதி விவரித்துப் பேசினார்.
தயாநிதி மாறன் பேசுகையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெமினி கணேசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, காமராஜரின்நெருங்கிய நண்பரான தியாகி சுப்புராமன் ஆகியோரது நினைவு தபால் தலைகளும் இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும்என்றார்.