ஊருக்குத்தான் உபதேசமா? கருணாநிதி, ராமதாஸுக்கு இல.கணேசன் கண்டனம்
மயிலாடுதுறை:
ஊருக்குத் தான் உபதேசம் என்பது போல, தமிழ் வழிக் கல்வி குறித்து முழக்கமிடும் கருணாநிதி, ராமதாஸ் போன்றோர் தங்களதுவீட்டுப் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பது எந்த ஊர் நியாயம் என்று அகில இந்திய பாஜகசெயலாளர் இல.கணேசன் கேட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், ஊருக்குத்தான் உபதேசம் என்பார்கள். அதுபோல தமிழ்வழிக் கல்வி குறித்து முழக்கமிட்டு வரும் கருணாநிதியும், ராமதாஸும், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் இந்தி வழியிலும்,ஆங்கில வழியிலும் கல்வி புகட்டியுள்ளார்கள்.கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போதே தயாநிதி மாறனுக்கு இந்தியும், ஆங்கிலமும் தெரியும் என்பதால் தான் அவரைதேர்தலில் நிறுத்தினேன் என்று கருணாநிதி பிரசாரம் செய்ததை மறந்து விட முடியாது. அதேபோல அவருக்கு அதே காரணத்தைக்காட்டித் தான் அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்தார்.
அதுபோலவே, பாமக நிறுவனர் ராமதாஸின் பேரப் பிள்ளைகள் டெல்லியில் ஆங்கில வழிக் கல்வியில் படித்து வருவதாகசெய்திகள் வெளியாகின்றன. இதைக் கேட்டால், டெல்லியில் தமிழ் வழிக் கல்விக்கு வாய்ப்பில்லை என்கிறார் அன்புமணிராமதாஸ்.
ஆனால் தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் டெல்லியில் எத்தனையோ இருக்கின்றன என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல திமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்களது பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை தமிழ்வாடையே தெரியாமல் தான் கல்வி புகட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் இல.கணேசன்.