ஏ.டி.எம்முக்குள் சிக்கி 3 மணி நேரம் தவித்த வாலிபர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். அறையின் கதவைத் திறக்க முடியாததால் சுமார் 3 மணி நேரம்உள்ளுக்குள் சிக்கித் தவித்தார் வாலிபர் ஒருவர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் தேசியமமயாக்கப்பட்ட வங்கியின் வளாகத்தில் உள்ள அதன் ஏ.டி.எம்.மையத்திற்குச் சென்று பணம் எடுத்துள்ளார். பணத்தை எடுத்த பிறகு கண்ணாடிக் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவுதிறக்கவில்லை.அங்கு பாதுகாவலர் யாரும் இல்லை. சுமார் அரை மணி நேரமாக கதவைத் திறக்க முயன்றும் முடியாமல் போனதால்,பதட்டமடைந்த அவர் தனது செல்போன் மூலம் நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தார்.
அவரது நண்பர்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸாரும்,தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் இரண்டரை மணி நேரம் போராடியும் அவர்களால் கண்ணாடிக் கதவைத் திறக்க முடியவில்லை. சுதந்திர தினம்என்பதால் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் வங்கியிலும் யாரும் இல்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வங்கியைத் திறந்து,ஏ.டி.எம். அறையின் பின்பக்கமாக சென்று முன் பக்க கண்ணாடிக் கதவை வங்கி அதிகாரிகள் திறந்து விட்டனர்.
சுமார் 3 மணி நேரமாக குளிர்சாதன அறையில் சிக்கித் தவித்த திருநாவுக்கரசு ஒரு வழியாக வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வங்கி அதிகாரிகளின் அஜாக்கிரதையான போக்கு காரணமாகவே நான்இப்படி அவதிப்பட நேரிட்டது. விடுமுறை நாள் என்பதால் ஒரு வாட்ச்மேனையாவது அவர்கள் இங்கு வைத்திருக்கலாம்.எந்தவித முன்யோசனையும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்குச் சென்று விட்டார்கள்.
ஒரு வேளை ஏ.சி இயந்திரம் இயங்காவிட்டாலோ அல்லது எனக்கு வேறு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருந்தாலோ என்னஆகியிருக்கும்? என்று ஆவேசப்பட்டார் திருநாவுக்கரசு.
எதற்கெடுத்தாலும் கூட்டம் கூடும் ஊர் நம் ஊர் என்பதால், ஏ.டி.எம். அறைக்குள் சிக்கித் தவித்த வாலிபரைப் பார்க்கவும்ஏராளமான பொதுமக்கள் கூடி நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சிலர் அவரை செல்போல் கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.