கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டம்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி:
சுய நிதிக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மத்தியஅரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நாடாளுமன்றத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்உறுதியளித்தார்.
சுய நிதிக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நேற்று நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி இந்த விவகாரத்தைக் கிளப்பியது. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி லோக்சபாயில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தார்.
இத் தீர்மானத்தில் மீது இன்று மக்களவையில் விவாதம் நடந்தது. கிருஷ்ணசாமி பேசுகையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விளைந்துள்ள சவாலை சமாளிக்க, தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைகட்டாயமாக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பராயன் பேசுகையில், சமூக நீதியைக் காக்க சட்டத் திருத்தம் கொண்டு வருவதே ஒரே வழிஎன்றார்.
பாமக உறுப்பினர் ராமதாஸ் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மிக அபாயமான சூழல் உருவாகியுள்ளது. ஏழை,பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ வேண்டிய கடமை தனியார் சுய நிதிக் கல்லூரிகளுக்கு கட்டாயம் உண்டுஎன்றார்.
இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அர்ஜூன் சிங், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சமூக நீதியைநிலைநாட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இட ஒதுக்கீட்டை திடமாக அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.
விரைவில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும். இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்முடிவதற்கு முன்பே கூட்டம் கூட்டப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியாகஉள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கல்வித்துறை அமைச்சர்களின் கூட்டத்தை வரும் 27ம் தேதி டெல்லியில் கூட்டியுள்ளோம்.இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது குறித்துவிரிவாக விவாதிக்கப்படும் என்றார்.
பிரதமருடன் திமுக கூட்டணி சந்திப்பு:
இதற்கிடையே தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில்,அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்து மனு கொடுத்தனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழக எம்பிக்கள்இன்று காலை பிரதமரை சந்தித்தனர்.
அவரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். இந்தக் கோரிக்கை குறித்து உடனடியாகப் பரிசீலிப்பதாக மன்மோகன் சிங்உறுதியளித்தார்.
பின்னர் வட சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை உறுதி செய்யும் விதமாக உடனடியாக மத்தியஅமைச்சரவையைக் கூட்டி அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டோம்.
இதுதொடர்பாக திமுக கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டமனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்தோம். எங்களது கோரிக்கை குறித்து நிச்சயம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார் பிரதமர்என்றார்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் திமுக கூட்டணி தவிர, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், ஜனதா தளம், தெலுங்கு தேசம்ஆகியவையும் ஒரே குரல் எழுப்பி வருகின்றன. பாஜகவும் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் பேசுகையில், நாட்டில் 25வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த ஜனத் தொகையில் 54 சதவீதமாகும். இந் நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடுமிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.
மார்க்சிஸ்ட் எம்.பியான நிலோத்பல் பாசு கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளஉறுதிமொழிகளுக்கு முரணாணது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை, பிற்பட்ட மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.நீதிமன்றத்தின் தீர்ப்பால் கல்வி மேலும் மேலும் வர்த்தகமயமாகிவிடும் என்றார்.