அரசியலுக்கு வரும் பிளேடு பக்கிரிகள்: காளிமுத்து
ஈரோடு:
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பிளேடு பக்கிரிகள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் முகில் பண்பலை சமுதாய வானொலி நிலையத்தைத் தொடங்கி வைத்த காளிமுத்து பேசியதாவது:முன்பெல்லாம் மாணவர்களை தண்டிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தது. ஆனால், அது இப்போது இல்லை.
திறமை மட்டும் இருந்தால் முன்னேற முடியாது. பிச்சை தான் எடுக்க முடியும். திறமையுடன் உழைப்பும் சேர்ந்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும்.
உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனம். மாணவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் எந்த மூலைக்குச் சென்றாலும் தங்கள் முகத்தையும் முகவரியையும் இழந்துவிடக் கூடாது. தமிழை தமிழாகப் பேசுங்கள். ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுங்கள். இரண்டையும் கலக்காதீர்கள்.
இந்த நேரத்தில் மாணவர்களை அரசியலுக்கு அழைக்கவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டட் பேட்டை ரவுடிகளும், பிளேடு பக்கிரிகளும், பொறுக்கிகளும் வந்துவிடுவார்கள் என்றார் காளிமுத்து.