200 பேருக்கு சன் டிவி அறக்கட்டளை ரூ. 50 லட்சம் உதவி
சென்னை:
சன் டிவியின் சன் பவுண்டேசன் சார்பில் 200 பேருக்கு ரூ. 50 லட்சத்துக்கு மருத்துவ, கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளை ரூ. 10 கோடியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கட்டணம், அபலைப் பெண்கள் என பல தரப்பினருக்கும் இந்த உதவி நிதி சென்றடைந்துள்ளது.மேலும் ஆதரவில்லாத குழந்தைகளுக்கான ஆசிரமங்களுக்கு போர்வெல்கள் அமைப்பது, தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற வகையிலும் இந்த அறக்கட்டளை உதவி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் அக்காள் மகனும், சன் டிவி அதிபர்களான கலாநிதி மாறன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் தந்தையுமான முரசொலி மாறனின் 71வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு உதவி நிதியை நேற்று கருணாநிதி வழங்கினார்.
அப்போது கருணாநிதி பேசியதாவது:
இது நெகிழ்ச்சியான விழா என்று குறிப்பிட்டார் வைரமுத்து. மாறனின் பெயர் சொல்கிற எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம்.
கலாநிதியும், தயாநிதியும் இந்த அறக்கட்டளை மூலம் அமைதியாக பலருக்கும் உதவிகளை செய்து வருகின்றனர்.
சூரியன் உதிக்காத நாடில்லை. அது போல சன் டிவி இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு விரிந்து பரிவியிருக்கிறது. ஒரு வாரம் கலாநிதி மாறன் சென்னையில் இல்லாவிட்டால், புதிதாக ஏதோ ஒரு நாட்டில் சன் டிவி தோன்றப் போகிறது என்று எண்ணிக் கொள்வேன் என்றார் கருணாநிதி.
கவியரசு வைரமுத்து பேசுகையில்,
என்னிடம் பணமும் மனமும் உண்டு என்பதை கலாநிதி மாறன் மெய்ப்பித்து இருக்கிறார். 3 ஆண்டுகளில் சத்தமே போடாமல், விளம்பரமே இல்லாமல் ரூ. 10 கோடியை உதவியாகத் தந்திருக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் தமிழ் மக்களோடு இருப்பவர்கள் என்பதை இந்தக் குடும்பம் மெய்ப்பித்து இருக்கிறது.
இந்தியாவின் சிறந்த 50 தொழிலதிபர்களில் கலாநிதியின் பெயர் இருப்பது ஒரு பெருமை. தயாநிதிக்கு டெல்லியில் இருக்கும் பெயரும் பெருமைப்பட வைக்கிறது. ஒரு இளைஞனுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று கேள்வி கேட்டவர்கள் எல்லாம் டெல்லி அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு தயாநிதி இருப்பதைக் கண்டு மூக்கில் விரல் வைக்கிறார்கள் என்றார்.
இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் ராம் பேசுகையில்,
மாறன் ஒரு அரிதான அரசியல்வாதி. ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பு வந்தால் சீறி எழுவார். எமெர்ஜென்சியின்போது நான் அதை நேரில் பார்த்தேன். செய்யும் வேலையை தெளிவாக, சிறப்பாக செய்ய வேண்டும் என்பது அவரது கொள்கை.
மாறன் உருவாக்கிய சன் டிவி நிறுவனம் திமுக ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளரவில்லை. தனது சொந்தத் திறமையால் வளர்ந்து சொந்தக் காலில் நிற்கிறது என்றார்.
மாறன் சிலைக்கு கருணாநிதி மாலை
மாறனின் 71வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இன்று மாலைஅணிவித்தனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாறன் சிலைக்கு கருணாநிதி, அன்பழகன், ஆற்காடுவீராசாமி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில், நாடாளுமன்ற திமுக அலுவலகத்திலும் மாறனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,ராஜா, பாமக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.












Click it and Unblock the Notifications