கல்லூரி விழாக்களில் சினிமா பாட்டுக்கு ஆட தடை!
சென்னை:
கல்லூரி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவியர் நடனம் ஆடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியருக்கான கல்விக் கடன்வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விஸ்வநாதன் பேசுகையில்,முன்பெல்லாம் படிப்பதற்கு வங்கிக் கடன் பெறுவது மிகவும் சிரமமமான காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அது மிகவும்எளிதாகக் கிடைக்கிறது. ரூ. 4 லட்சம் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வங்கிகள் கடன் தர ஆரம்பித்துள்ளன.
தங்களை பெற்றோர்கள் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை மாணவ, மாணவியர் உணர்ந்து நன்றாகப் படிக்கவேண்டும்.
தற்போது பல்வேறு பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் கலை விழாக்களின்போது சினிமா பாடல்களுக்கு மாணவ,மாணவியர் நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது. கலை விழா தான் என்றாலும் சினிமா பாடலுக்கு ஆட வேண்டியஅவசியமில்லை.
இந்த ஆட்டம், பாட்டத்தால் மாணவ, மாணவியரின் படிப்பு தான் பாதிக்கப்படுகிறது. இந்த நடன நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்டஒரு மாதம் வரை மாணவ, மாணவியர் பயிற்சி எடுக்கிறார்கள் என்றும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
எனவே இனிமேல் தமிழக பொறியியல் கல்லூரிகளில் இதுபோல பாடல்களுக்கு நடனம் ஆட தடை விதிக்கப்படுகிறது. மேலும்உடைக் கட்டுப்பாட்டையும் மாணவ, மாணவியர் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்குஉத்தரவிட்டுள்ளேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் செல்போன்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உடைகள் அணிவதிலும்சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், உடனடியாக டி.சிகொடுத்து அனுப்பி விடுவோம் என்றார் விஸ்வநாதன்.












Click it and Unblock the Notifications