நக்சல்கள் அபாயம்: ஜெயேந்திரருக்கு பாதுகாப்பு
திருப்பதி:
ஆந்திராவில் நக்சலைட்டுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருப்பதால் திருப்பதியில் தங்கியுள்ள ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் திருப்பதியில் தங்கி சதுர்மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால்செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் கூட அவர்கள் ஆஜராகாமல் இருந்து வருகின்றனர்.இந் நிலையில் ஆந்திராவில் நக்சலைட்டுகள் தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது. சமீபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நர்சிரெட்டி உள்ளிட்ட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து நக்சலைட் இயக்கங்களுடன் நடத்தி வந்தபேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட ஆந்திர அரசு அந்த அமைப்புகளுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது.
இதனால் நக்ஸல்களின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் விஐபிக்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ஸல்களின்பட்டியலில் சங்கராச்சாரியார்களும் உள்ளதாக உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் உள்ள சங்கர மடத்திற்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. 19 துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.