மதானியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் கைதியான கேரள மக்கள்ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.இந்த சம்பவம் தொடர்பாக அல்-உம்மா தலைவர் பாட்ஷா, மதானி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.இவர்களில் மதானி தன்னை ஜாமீனில் விடக் கோரி கடந்த 7 ஆண்டுகளாக கோவை நீதிமன்றம் முதல் சென்னைஉயர்நீதிமன்றம் வரை பல்வேறு நீதிமன்றங்களில் மனு செய்தார். அனைத்து மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தான் உடல்நலமின்றி இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு வசதியாக தன்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று மதானி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் சேமா, ஸ்ரீகிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, மதானிக்கு உடல் நலம் சரியாகி விட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்று கூறி அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டனர். மதானியின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் ஜாமீனில் வெளிவருவதற்கான கடைசி வாய்ப்பும் மதானிக்கு இல்லாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications