தமிழக ரயில்வேயை கட்டுப்படுத்தும் கேரளம்!
டெல்லி:
கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாகப் பிரித்து சேலம் நகரை தலைமையிடமாகக் கொண்டு புதியரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படடு வருவதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வேயின் பல பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் தான் உள்ளன. இங்கு கேரள நபர்களின் ஆதிக்கம் உள்ளது.இதனால் தமிழக ரயில் திட்டங்களுக்கு இந்தக் கோட்டம் முன்னுரிமை தராமல் கேரளத்தை கவனிப்பதிலேயே குறியாக உள்ளது.மேலும் நிர்வாகரீதியிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்துக்குள் ரயில்வே துறையை கேரளத்தில் உள்ளபாலக்காட்டு அதிகாரிகள் கட்டுப்படுத்துவதால் பல விஷயங்களில் பிரச்சனை உருவாகி வருகிறது.
இதையடுத்து பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக ரயில்வே பகுதிகளை தமிழக கோட்டத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு லாலு பதிலளிக்கையில், சேலம் நகரைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தை அமைப்பது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலிக்க ரயில்வேஅமைச்சகம் தயாராக உள்ளது.
இருப்பினும், இதுதொடர்பாக கேரள மற்றும் தமிழக அரசுகள் மனவந்து சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்படித்தெரிவித்தால் சேலம் ரயில்வே கோட்டத்தை உருவாக்குவதில் ரயில்வே துறைக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது என்றார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, ஈரோடு, சேலம் ஆகியவை தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளரயில்வே கோட்டத்தின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.