போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு புலிகள் தயார்
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பலப்படுத்துவது குறித்து இலங்கை அரசுடன் அவரசப் பேச்சு நடத்த விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கான இடம், நாளை இறுதி செய்வது தொடர்பாக இரு தரப்பினருடனும் நார்வே தூதர்கள் பேச்சு நடத்திவருகின்றனர்.வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் மீறிவிட்டதாகவும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை என மறுத்துள்ள புலிகள் இதற்கு அதிகாரத்தில்இருப்பவர்களில் ஒரு பிரிவினரும் ராணுவத்தில் ஒரு பிரிவினருமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் கொலையால் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பல நாடுகளும் அச்சம்தெரிவித்துள்ளன. இந் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், மீண்டும் போர் வெடிப்பதைத் தவிர்க்கும்முயற்சிகளும் நார்வே தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜேன் பீட்டர்சன், துணை வெளியுறவு அமைச்சர் விடால் ஹெல்ஜெசன் ஆகியோர் நேற்றுலண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசினார்.
அப்போது போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்துவது குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்த புலிகள் முன் வந்தனர். இத் தகவலைநார்வே தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் டாம் நேப்ஸ்காக் கொழும்பில் இன்று தெரிவித்தார்.
இந்த புதிய பேச்சுவார்த்தைக்கு நாளோ, இடமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த 2003ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதையடுத்து இருவரும் மீண்டும் பேச்சு நடத்தப் போவதுஇதுவே முதல் முறையாகும்.
கதிர்காமர் கொலைக்குப் பின் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய புலிகளை உடனே பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்படிநார்வேயிடம் சந்திரிகா தொடர்ந்து கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.