ரா ஏஜென்டுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 5 குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய உளவுப் பிரிவானராவின் ஏஜென்ட் என்று கூறப்படும் நபருக்கு மரண தண்டனையை அந் நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மான்ஜின் சிங் என்பவரை கடந்த 1990ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. காசூர் எல்லைப்பகுதியில் வைத்து இவர் பிடிபட்டார்.இவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, பாகிஸ்தானில் 5 இடங்களில் குண்டு வைத்ததை இவர் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு கூறியது. இதையடுத்து இவருக்கு மரண தண்டனை விதித்து அந் நாட்டு தீவிரவாதத் தடை பிரிவு நீதிமன்றமும்லாகூர் நீதிமன்றமும் உத்தரவிட்டன.
இதை எதிர்த்து சிங்கின் சார்பில் அந் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தனது அப்பீல் மனுவில், தான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது உண்மையான பெயர் சுர்ஜீத் சிங் என்றும், சிறிதுகாலம் ஆக்ராவில் வசித்துவிட்டு பின்னர் அமிர்தசரசில் செட்டில் ஆனதாகவும், அவ்வபோது பாகிஸ்தானுக்கு மது கடத்திவந்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனால், மது கடத்தியபோது சிங் பிடிபடவில்லை என்றும் குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டுத் தப்பியபோது தான் கைதுசெய்யப்பட்டார் என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது. மேலும் விசாரணையின்போது குண்டுகளை வைத்ததை இவர் ஒப்புக்கொண்டதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.
விசாரணையின்போது தந்த வாக்குமூலத்தில், 1987ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் தான் சேர்ந்ததாகவும்பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் இதையடுத்து ரா பிரிவில் நிரந்தர ஏஜென்டாக நியமிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு14 முறை அனுப்பப்பட்டதாகவும் சிங் கூறியதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.
ஆனால், தான் ரா ஏஜென்டே கிடையாது என சிங் தரப்பு திட்டவட்டமாக மறுத்து வாதாடியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சிங்குக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது.