ஆசிரியை மாயமான வழக்கில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெ. அவசர அழைப்பு
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் தீவிரமான சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.பாப்பா சுந்தரம், முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்பையடுத்து சென்னை விரைந்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு இறுதியில் காணாமல் போனார்.இந்த வழக்கைசிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.இந்த வழக்கில் வருகிற 22ம் தேதிக்குள் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்படும் என மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இறுதிக் கெடு விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சிபிசிஐடி எஸ்.பி. பிரேம்குமார் வசம்தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
பிரேம்குமாரின் நேரடி மேற்பார்வையில் இவ்வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரேம்குமாரிடம் வழக்கு மாறியபிறகு, மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்திற்கு ஒரு திடீர் கடிதம் வந்தது. மீனாட்சி எழுவது போல அந்தக் கடிதம்எழுதப்பட்டிருந்தது.
அதில், தான் சென்னையில் இருப்பதாகவும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும்,இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை மீனாட்சி எழுதவில்லை என்றும் தன்னைத் திட்டமிட்டு இவ்வழக்கில் சிக்க வைக்க சிபிசிஐடி போலீஸார்மேற்கொள்ளும் சதியின் ஒரு பகுதியே இந்தக் கடிதம் என்றும் ஜோதி ராமலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந் நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாஅழைத்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாக சென்னைக்கு விரைந்துள்ளார்.
வரும் 22ம் தேதியுடன் சிபிசிஐடிக்கு விதிக்கப்பட்டுள்ள கெடு முடிவடைதால், இவ்வழக்கில் இன்னும் சில நாட்களில் முக்கியத்திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பாப்பா சுந்தரம் அவரது மகன் கருணாகரன் ஆகியோரை விசாரிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளைகூறியிருந்ததால் அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பான அறிக்கையும் 22ம் தேதி உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த வழக்கில் பாப்பா சுந்தரத்தைக் காப்பதிலேயே போலீசார் கண்ணும் கருத்துமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நீதிமன்றத்தின் தொடர் கண்டிப்பால் வேறு வழியில்லாமல் பாப்பாவை நோண்டி வருகின்றர் போலீசார்.