சுயநிதி கல்லூரி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடும் கண்டனம்
டெல்லி:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புஉருவாகியுள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இதையடுத்து இட ஒதுக்கீட்டைப்பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் தலித் கிருஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுஇன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இதனை விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்மிலன் பானர்ஜி, இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசோடு மோதல் போக்கை கையாள மத்திய அரசு விரும்பவில்லை என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், நாங்கள் மோதல் போக்கை மேற்கொள்ள விரும்பவில்லை என மத்திய அரசு மறுபடியும் மறுபடியும் சொல்கிறது.அப்படியானால் யார் மோதல் போக்கில் ஈடுபட்டது?
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை என 11 நபர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளது. அதைத்தான் 7 நீதிபதிகள் பெஞ்சும் வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல அரசு நடந்து கொண்டால் பேசாமல் நீதிமன்றங்களை மூடிவிட்டு நீங்கள் நினைப்பதை செய்து கொள்ளுங்கள் என்றனர்.
அப்போது பேசிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம்,
நீதிமன்றங்களை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், நீதிமன்றங்களை எப்படி மதித்து நடப்பது என்று உங்கள் தரப்பிடம் (அரசு) போய் சொல்லுங்கள். நீதிமன்றங்களை அரசுஇவ்வாறு நடத்த ஆரம்பித்தால், நாங்கள் எங்கள் வேலைகளைச் செய்வோம். அவர்கள் செய்வதை அவர்கள் செய்து கொள்ளட்டும்.
7 நீதிபதிகள் தீர்ப்பை புரிந்து கொள்ளாமல் அரசு பேசி வருகிறது. அரசுக்கு இந்த விஷயத்தில் தன்னடக்கம் தேவை என்பதை அரசு வழக்கறிஞர்கள்எடுத்துச் சொல்ல வேண்டும் என்றனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications