அரசு வக்கீலாக சிதம்பரம் மனைவி நியமனம்: அதிமுக புகார்
டெல்லி:
வருமான வரித் துறை தொடர்பான வழக்குகளில் மத்திய அரசு சார்பில் வாதாட, தனது மனைவி நளினியை நிதியமைச்சர்ப.சிதம்பரம் நியமித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து அவையில் வாக்குவாதம் மூண்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய அதிமுக எம்பியான ஜோதி,மத்திய நிதியமைச்சர், வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில், மத்திய அரசின் சார்பில் ஆஜராக தனது மனைவிநளினியை அரசு வக்கீலாக நியமித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்தப்புகாரை நான் கூறுகிறேன் என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவை காங்கிரஸ் எம்.பி. நாராயணசாமி பேசுகையில், விதிஎண் 238(ஏ)வின்படி இவ்வாறு புகார் கூறும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முன்பே தெரிவித்து, அவரது விளக்கத்தைக்கோர வேண்டும். முன் அனுமதி பெறாமல் இப்படி நேரடியாக குற்றம் சாட்ட முடியாது என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களான எஸ்.எஸ்.சந்திரன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் எழுந்து ஜோதிக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பதிலுக்கு அதிமுகவினரை நோக்கி குரல் கொடுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே பெரும்வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக அவைத் தலைவரான குரியன், ஜோதியையும் அதிமுக எம்பிக்களையும்அமருமாறு கூறினார்.
அப்போது மாநிலங்களவைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அவைக்குள் வந்தார்.
அவரிடம் தனது குற்றச்சாட்டைத் தெரிவித்தார் ஜோதி. ஆனால் முன் அனுமதியில்லாமல் இப்படியெல்லாம் பேச முடியாதுஎன்று ஷெகாவத் கூறினார். இதையடுத்து தன்னிடமிருந்த ஆவணங்களை ஷெகாவத்திடம் கொடுத்தார் ஜோதி.
இந்த ஆவணங்களை ஆராய்ந்து முடிவைத் தெரிவிப்பதாக ஷெகாவத் கூறவே தனது இருக்கையில் அமர்ந்தார் ஜோதி.