For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மோட்டோராலோ செல்போன் ஆலை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

மோட்டோராலோ நிறுவனம் தமிழகத்தில் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கப் போவதாக மத்திய தகவல்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

ஏற்கனவே நோக்கியா நிறுவனம் சென்னையில் செல்போன் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந் நிலையில் மோட்டோராலோவும் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குகிறது.

வேலூரில் புதிய தபால் அலுவலக கட்டடத்தைத் துவக்கி வைத்து மாறன் பேசுகையில்,

தபால்துறை ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. என்றாலும் தமிழகத்தில் தபால் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 11 கோடியை ஒதுக்கியுள்ளேன்.

சென்னை அருகே திருப்பெரும்புதூரில் நோக்கியா செல்போன் ஆலை அமையவுள்ளது. இது மறைந்த ராஜிவ் காந்திக்கு திமுக செலுத்தும் கடன்.

சாப்ட்வேர் பார்க்குகள் அமைக்க வேண்டுமானால் மாநில அரசு தான் இடம், கட்டுமான செலவுகளை ஏற்க வேண்டும். ஆனால், தமிழக அரசு எந்த உதவியும் செய்வது கிடையாது. கோவையில் தனியார் உதவியுடன் தான் குமரகுரு கல்லூரியில் சாப்ட்வேர் பூங்கா அமைக்கப்பட்டது.

அதே போல வேலூரிலும் தனியார் நிலம் தந்தால், சாப்ட்வேர் பூங்கா அமைக்க முயற்சி எடுப்பேன்.

நான் மத்திய அமைச்சராக இருக்கும் வரை தொலைபேசி கட்டணங்கள் குறைந்து கொண்டு இருக்கும். யாருடையே நெருக்குதலுக்கும் நான் பணிய மாட்டேன்.

வேலூருக்கு பெருமை சேர்த்த ஊரிஸ் கல்லூரிக்கும், கிருபானந்தவாரியாருக்கும் நினைவு தபால் தலைகள் வெளியிடப்படும்.

தமிழகத்தில் செல்போன் ஆலையை அமைக்க மோட்டோரோலோ முன் வந்துள்ளது. இந் நிறுவனம் வெறும் ரூ. 1,200க்கு செல்போன்களைத் தயாரிக்கவுள்ளது என்றார்.

பின்னர் திமுக மாநாட்டில் பேசிய மாறன்,

தமிழகத்தில் நல்ல திட்டங்களைக் கொண்டு வர அதிமுக அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வர பாலு பட்ட பாடு அனைவருக்கும் தெரியும். கருப்புக் கொடி காட்டி அவரை அசிங்கப்படுத்தினாலும் சளைக்காமல் திட்டத்தை கொண்டு வந்து காட்டிவிட்டார் பாலு.

மகளிர் சுய உதவிக் குழுவினர் இப்போது அந்த அம்மையாரின் (முதல்வர் ஜெயலலிதா) கண்ணில் பட்டுவிட்டார்கள். அவர்கள் உதவியுடன் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் ஜெயித்துவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு எங்கு நல்லது நடந்தாலும் பிடிக்காது. மகளிர் குழுக்களை கெடுக்கும் வேலையில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பயோடேட்டாவைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம். காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பார். பின்னர் காலை வாருவார்.

எம்ஜிஆர் செயல் இழந்துவிட்டதாக சொல்லி அவரை பதவி நீக்கிவிட்டு தன்னை முதல்வராக்கக் கோரி ராஜிவ் காந்தி கடிதம் போட்டவர் அவர். பின்னர் எம்ஜிஆரை ஜானகி தான் விஷம் வைத்து சாகடித்தார் என்றார்.

பின்னர் எம்ஜிஆரின் சொத்துக்களுக்காக ஜானகி அம்மையாரை அக்கா, அக்கா என்று அழைத்தார். இதனால் ஜெயலலிதாவை நம்பி மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏமாந்துவிடக் கூடாது. உங்கள் வாக்குகளுக்காக உங்கள் காலை சுற்றும் பாம்பு தான் ஜெயலலிதா. உங்களை கொத்தாமல் விட மாட்டார்.

எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏக்களைக் கூட்டிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றியவர்கள் திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும். அவர்களையே கட்சியை விட்டு நீக்கியவர் ஜெயலலிதா.

ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவை தனது தலையில் வைத்து ஆடிவிட்டு காகியம் முடிந்ததும் தூக்கி வீசினார். அவரது முகத்தில் ஆசிட்டும் வீசப்பட்டது. இது தான் ஜெயலலிதாவின் சுயரூபம்.

2001ம் ஆண்டில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க சுப்பிரமணியம் சுவாமியை கூட்டிக் கொண்டு கையில் ஒரு குட்டிப் பையுடன் டெல்லி போனார். கூட்டணி அமைந்ததும் சோனியாவை மதிக்கவில்லை. விழுப்புரம் கூட்டத்தில் சோனியாவை மணிக்கணக்கில் காக்க வைத்தார்.

கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த முகமது அலி, முத்துக்கருப்பனை தலையில் தூக்கி வைத்தார். காரியம் ஆனதும் அவர்கள் சஸ்பெண்ட் ஆனார்கள்.

இதையெல்லாம் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை நம்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் சின்ன உதாரணம். தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு மறதி அதிகம்.

ஜெயலலிதா மீது அவர்களுக்கு கோபம் தணிந்துவிட்டது போலத் தெரிகறது. ஆனால், ஜெயலலிதாவின் சுய ரூபத்தை எடுத்து விளக்கமாகச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X