இராக்: புனிதத் தலத்தில் கூட்ட நெரிசல், ஆற்றில் விழுந்து 630 பேர் பலி
பாக்தாத்:
இராக் தலைநகர் பாக்தாதில் ஒரு புனிதத் தலத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியதால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியும், பாலம் உடைந்ததில் ஆற்றில் விழுந்தும் 630க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
டைகிரிஸ் நதியின் அருகே உள்ள ஷியா பிரிவினரின் இமாம் மூஸா அல்-காதிம் புனிதத் தலத்தில் இமாமின் நினைவுதினத்தையொட்டி இன்று லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.அப்போது அந்த இடத்துக்கு அருகே சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் புனிதத் தலத்தில் கூடியிருந்த கூட்டத்துக்குள் இரு தற்கொலைப் படையினர் உடலில் குண்டுகளுடன்புகுந்துவிட்டதாக புரளி பரவியது.
இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் டைகிரிஸ் நதியின் மீது உள்ள பாலத்தின் வழியாக தப்பியோடினர். ஆயிரக்கணக்கானவர்கள் அந்த சிறியபாலத்தில் ஓடியதால் அந்தப் பாலம் உடைந்து விழுந்தது. இதில் பலர் நதியில் விழுந்தனர். அவர்களில் பலரும் உயிரிழந்தனர்.
மொத்தத்தில் இப் பகுதியில் 630 பேர் வரை உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இராக்கில் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஷியாக்களுக்கும் குர்து இனத்தினருக்கும் ஆதரவாகஇருப்பதாகக் கூறி அந்த அரசியல் சட்டத்தை சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள சன்னி இனத்தினருக்கு எதிராக இந்த அரசியல் சட்டத்தை அமெரிக்காவும்,ஷியாக்களும், குர்து இனத்தினரும் உருவாக்கியுள்ளதாக சன்னி பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சதாம் ஹூசேனும் இதே பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் தீவிர தாக்குதல்களை நடத்திவருகின்றனர் இந்தப் பிரிவினர்.