பிரேமானந்தா வழக்கு தீர்ப்பு: ஜனாதிபதியின் கருத்தைப் பெற ஜேத்மலானி வலியுறுத்தல்
டெல்லி:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா விவகாரத்தில், குற்றவாளிகளை அடித்து, உதைத்து உண்மையை வரவழைக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து, ஜனாதிபதியின் கருத்தைப் பெற மத்திய அரசு முயல வேண்டும் என பிரபலகிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று இந்த விவகாரத்தை ஜேத்மலானி கிளப்பினார்.அவர் பேசுகையில், பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ள சில கருத்துக்கள் மிகவும் கடுமையானவை.
குற்றவாளியை அடித்து உண்மையை வரவழைக்க முடியும் என்று போலீசார் கருதினால், போலீசார் அதைச் செய்யலாம் என்றும்,இவ்வாறு அடித்துப் பெறப்படும் சாட்சியம் செல்லும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து, உதைக்கவும் மூன்றாந்தர தண்டனைகளை வழங்கி சாட்சியம் பெறவும்,காவல் நிலையங்களை கொடுமைக் களங்களாக மாற்றவும் போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் லைசென்ஸ் கொடுத்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்காக நாம் தலைகுனிய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் சட்ட,திட்டம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து குறித்து ஜனாதிபதியின் கருத்தைப் பெற வேண்டும். என்றார்.
13 பெண்களை கற்பழித்தது, ஒருவரைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்கா பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தாவுக்காக விசாரணைநீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜேத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.