அமெரிக்க சூறாவளி: நியூ ஓர்லியன்சில் பயங்கர பாதிப்பு- நூற்றுக்கணக்கானவர்கள் பலி
வாஷிங்டன்:
அமெரிக்காவைத் தாக்கிய ஹரிக்கேன் கேத்ரீனா சூறாவளியில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
நியூ ஓர்லியன்ஸ் நகரம் தான் இந்தச் சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளியின்போது பெய்த கனமழை காரணமாக இந்த நகரின் 80 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன.மேலும் இந்தச் சூறாவளியைத் தொடர்ந்து கடைகள், வீடுகளில் கும்பல்கள் புகுந்து கொள்ளையடித்து வருகின்றன. இயற்கைச்சீற்றத்தைப் பயன்படுத்தி கிரிமினல்கள் கைவரிசையைக் காட்டி வருவதால் அங்கு பெரும் பீதி பரவியுள்ளது.
சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடந்த இரு நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். வீடுகளுக்குள்வெள்ளம் புகுந்துள்ளதால் பலர் கூரைகளில் அமர்ந்தபடி மீட்புப் படையினரின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
இங்கு தொலைபேசிக் கட்டமைப்பும் சிதைந்துவிட்டதால் தொலைத் தொடர்பும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தமாகாணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகிவிட்டதாக இப்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் நீரில் உடல்கள் மிதந்து கொண்டுள்ளன. இந்த நகரின் இரண்டு விமான நிலையங்களும் நீரில் மூழ்கிவிட்டன.துறைமுகத்தில் ஒரு எண்ணெய் கப்பல் தரைதட்டி பெட்ரோலிய எண்ணெய் நீரில் கலந்து நகருக்குள் பரவி வருகிறது.
அதே போல இந்தச் சூறாவளியால் மிசிசிபியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.