என்னையும் திருமாவையும் பிரிக்க முடியாது: ராமதாஸ்
விழுப்புரம்:
இனி என்னையும் திருமாவளவனையும் பிரிக்க எந்த சூழ்ச்சி செய்தாலும் முடியாது என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
எனக்கும் திருமாவளவனுக்கும் இடையே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்தபோது எங்களை ஒன்று சேர்க்க தமிழ்நாட்டில் ஒருவர்கூட முன்வரவில்லை. எங்களை ஒன்று சேர்த்தது தாய் மொழியான தமிழ் தான். இனி என்னையும் திருமாவளவனையும் பிரிக்கஎந்த சூழ்ச்சி செய்தாலும் முடியாது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இது வேறு மொழிக்கு எதிரானது அல்ல என்று கூறி வருகிறோம். வரும் 21ம்தேதி இந்த இயக்கத்தின் சார்பில் தமிழுக்காக சில கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளோம்.அதில் லட்சக்கணக்கானர்கள் கலந்து கொள்வார்கள்.
நாங்கள் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை இது தான். போராட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை அன்று இரவேவிடுதலை செய்யாதீர்கள். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் இருக்க நாங்கள் தயார் என்றார்.