அமெரிக்கா: நியூ ஓர்லியன்ஸ் 80 சதவீதம் அழிந்தது- ஆயிரக்கணக்கானவர்கள் பலி
நியூயார்க்:
அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
நியூ ஒர்லியன்ஸ் நகரின் 80 சதவீதப் பகுதிகள் நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. ஹரிக்கேன் கேத்ரினா என்ற அந்த பயங்கரசூறாவளிக்கு இந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்விட்டன.பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் அப்படியே வேறோடு இடம் பெயர்ந்துள்ளன. கார்கள், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.கடலில் நின்றிருந்த படகுகள் சாலைகளில் எறியப்பட்டுள்ளன.
பெரும் அலைகளாலும், கன மழையாலும் நகரின் பெரும்பாலான பகுதிகள் 20 அடிக்கும் அதிகமான நீருக்குள் மூழ்கிக்கிடக்கின்றன.
இந்த நகரை சீர் செய்ய பல வருடங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது. நகரில் 80 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துவிட்டன.அதே போல பாலங்களும் இடிந்து விழுந்துள்ளன. நெடுஞ்சாலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மின்சார, தொலைபேசி வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட இந்தப் பகுதி போர்க் களம் போல காட்சியளிக்கிறது.
இங்கு அமெரிக்க ராணுவம், கடற்படை, போலீசார், தீயணைப்புப் படையினர் ஆகியோர் மாபெரும் மீட்புப் பணியில் இரவு,பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மக்கள் கூரைகளில் ஏறி நின்று உதவி கோரி வருகின்றனர். அவர்களை ராணுவ, போலீஸ்ஹெலிகாப்டர்கள் மீட்பு வருகின்றன.
சிறைச் சாலைகளும் நீருக்குள் மூழ்கிவிட்டதால் கைதிகள் வெளியேற்றப்பட்டு திறந்த வெளிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்களில் உணவு, மருந்துகள் நியூ ஓர்லியன்ஸ் நகரை நோக்கி சென்றவண்ணம் உள்ளன. ஆனால்,அவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் வீடு வீடாக படகுகளில் சென்றே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் பல வீடுகளுக்குள் பிணங்கள் கிடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.சாலைகளிலும் நீரில் பிணங்கள் அடித்து வரப்படுகின்றன.
இதுவரை அமெரிக்கா சந்தித்துள்ள மிகப் பெரிய இயற்கை சீரழிவு இது தான் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பார்வையிட்ட அதிபர் புஷ், இந்தப் பகுதிகளை சீரமைக்க பல வருடங்கள் ஆகும்என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகிவிட்டதாகநியூ ஓர்லியன்ஸ் மேயர் ரே நகின் கூறியுள்ளார்.
இதற்கிடையே நியூ ஓர்லியன்ஸ் முழுவதும் ஆங்காங்கே கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. வீடுகள், கடைகளில்புகுந்து இருக்கும் பொருட்களை மக்கள் அள்ளிச் சென்று வருகின்றனர்.
இதனால் சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்து போயுள்ளது. நீரில் அடித்து வரப்பட்ட கார்களையும் பல கும்பல்கள் திருடிவருகின்றன.
இப் பகுதியில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல ஹூஸ்டனிலும்கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிசிசிப்பியில் மட்டும் 110 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த பயங்கர சூறாவளியால் அலபாமா, லூசியானா, மிசிசிப்பி ஆகியவை தான் மிகக் கடுமையான பாதிப்புக்குஉள்ளாகியுள்ளன.
இதற்கிடையே சூறாவளியால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு இந்தியா அதிர்ச்சியும் ஆழ்ந்த அனுதாபமும்தெரிவித்துள்ளது. அதிபர் புஷ்சுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது அனுதாப செய்தியை அனுப்பியுள்ளார்.