கிருஷ்ணா நீர்: ஆந்திர குழு சென்னை வருகிறது
சென்னை:
கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாக ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்து தமிழகஅதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சென்னைக்கு கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாகடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமீபத்தில் சென்னைக்கு வந்த ராஜசேகர் ரெட்டி தெரிவித்திருந்தார்.இந்தப் பின்னணியில், ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் அளவிலான குழுவருகிற 13ம் தேதி சென்னைக்கு வருகிறது. இக்குழுவுக்கு தெலுங்கு கங்கை திட்ட தலைமை செயல் அதிகாரி விஜயக்குமார்ரெட்டி தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவினர் தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தபேச்சுவார்த்தையின்போது கிருஷ்ணா நீரை திறந்து விடுவது தொடர்பாக முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.
தற்போதைய நிலையில், ஆந்திர மாநிலம் சோமசீலா அணையில் 16 டிஎம்சி தண்ணீர் உள்ளது. 23 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான்அணையைத் திறக்க முடியும். தற்போது அணைக்கு ஓரளவு தண்ணீர் வரத்து உள்ளது. இன்னும் 10 நாட்களில் அணை நிரம்பும் எனஆந்திர அரசு எதிர்பார்க்கிறது. அணை நிரம்பிய பிறகு சோமசீலா அணை திறக்கப்படும். இந்தத் தண்ணீர் கண்டலேறு அணைக்குவரும். கண்டலேறு அணையில் போதிய அளவில் நீர் இருந்தால் அது தமிழகத்திற்குத் திறந்து விடப்படும்.
இந்தத் தண்ணீர்தான் சென்னைக்கு அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும். எப்படியும் இன்னும் 2 வாரங்களில் பூண்டிநீர்த் தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு நீரே இருப்பு உள்ளது. இருப்பினும் வீராணம்ஏரியில் போதிய தண்ணீர் இருப்பதால் சென்னைக்கு தினசரி குடிநீர் வழங்குவதில் இதுவரை பிரச்சினை ஏதும் வரவில்லை.