23 பேரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
மதுரை:
ராமநாதபுரத்தில் 23 பேரிடம் ரூ. 30 லட்சம் பணத்தை மோசடி செய்த 5 பேர் கும்பலில் 2 பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவுபோலீஸார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேலையில்லாத படித்த பட்டதாரிஇளைஞர்களை அணுகிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இக்கும்பல் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தைக் கறந்தது.ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 4.35 லட்சம் வரை தருமாறு இக்கும்பல் கேட்டுள்ளது. முதலில் ரூ. 2 லட்சத்தைக் காடுத்துவிடுமாறும், ஜப்பானில் வேலைக்கு சேர்ந்த பின்னர் மீதப் பணத்தைக் கொடுக்குமாறும் இவர்கள் கூறவே அதை நம்பிய பலரும்இவர்களிடம் பணம் கொடுத்துள்ளனர்.
இப்படியாக ரூ. 30 லட்சம் வரை இக்கும்பல் பணத்தைப் பெற்றுள்ளது. பணத்தைக் கொடுத்த பிறகும் அவர்கள் வேலை வாங்கித்தராமல் இழுத்தடிக்கவே சந்தேகமடைந்த இளைஞர்கள் ராமாநதபுரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் 5 பேர் கும்பலில் 2 பேரை பிடித்தனர்.மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.