தே.மு.தி.க குறித்து ராமதாஸ் நக்கல்!
திண்டிவனம்:
நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கையில் மேலும்ஒன்று கூடியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலாக கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில் விஜயகாந்த்ஆரம்பித்துள்ள புதிய கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராமதாஸ்,தமிழகத்தில் ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத குட்டிக் குட்டிக் கட்சிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கைதற்போது கூடியுள்ளது, அவ்வளவுதான் என்று நக்கலாக கூறினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறையாக தமிழகம் உள்ளது. கல்லறையில் வெள்ளை அடிக்கப்பட்டபிறகு பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் எலும்புக் கூடுகள்தான் இருக்கும். தமிழக நிலையும்அப்படித்தான்.
சேது சமுத்திரத் திட்டம் அண்ணா வலியுறுத்திய திட்டம். அந்தத் திட்டத்தை கிடப்பில் போட வேண்டும் என்று ஜெயலலிதாசொல்கிறார். இந்த ஒரு காரணத்துக்காகவே அவரது ஆட்சியை அகற்ற வேண்டியது மக்களின் கடமையாகும்.
கல்வியில் புரட்சி செய்து விட்டோம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் ஏழை மக்களால் கல்வி பெற முடியாத நிலையைஉருவாக்கியிருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த நான்கரை ஆண்டுகளில் சர்வாதிகாரத்தை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவின் மக்கள் விரோத அரசு ஆட்சி புரிந்துவருகிறது. இந்த அரசு இருப்பதை விடபோவதே மக்களுக்கு நல்லது என்றார் ராமதாஸ்.