40 வருடமாக என்ன செய்தார்கள் அரசியல்வாதிகள்? விஜயகாந்த்
மதுரை:
கடந்த 40 வருடமாக நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள். அதை நான் மாற்றுவேன். மற்றஅரசியல்வாதிகளைப் போல செயல்பட மாட்டேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை தோப்பூரில் நடிகர் விஜயகாந்த்தின் புதிய அரசியல் கட்சி புதன்கிழமை காலை உதயமானது. மாலையில் தனது கட்சியின்கொள்கைகள், திட்டங்களை விளக்கி விஜயகாந்த் விரிவாகப் பேசினார்.விஜயகாந்த்தின் பேச்சு:
மதுரையில் நான் ரைஸ்மில்லில் வேலை பார்த்தேன். அப்படியே சுகமாக இருந்திருக்கலாம். தினசரி 50 கிலோ எடை கொண்ட300 மூடைகளை தூக்கி சுமந்தவன் நான். ஆனால் அந்த சுகம் எனக்கு போதவில்லை. ஆரம்பம் முதலே ஏழை, எளிய, நடுத்தரமக்களுடன்தான் பழக்கம். எப்போதும் போராட்டத்தையே எனது மனது விரும்பும்.
காலத்தின் கட்டாயத்தால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவிலும் ஆரம்பத்தில் போராட்டமே வாழ்க்கையாக இருந்தது.ஆனால் நல்ல நிலைக்கு வந்ததும் எனது பிறந்த நாள் விழாவை மக்களுக்கு உதவி செய்யும் நாளாக கொண்டாட ஆரம்பித்தேன்.இன்று வரை அதுதான் நீடித்து வருகிறது.
நமது மாநிலத்தில் மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் லட்சக்கணக்கில் கொடுத்து உதவியுள்ளேன். பிற மாநிலங்களில்பூகம்பம், வெள்ளப் பெருக்கு என இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் லட்சக்கணக்கில் கொடுத்து உதவியுள்ளேன். இதைசிலர் கிண்டல் செய்தனர்.
எனது மாநாட்டை நான் சொந்தப் பணத்தில்தான் நடத்துகிறேன். இதையும் சிலர் கிண்டல் செய்தனர். தொண்டர்களிடமிருந்துஐந்து பைசா கூட பெறவில்லை. அவர்கள் செய்த விளம்பரத்தில் இருப்பது சாதாரண வர்ணம் இல்லை, அவர்களது ரத்தம்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கப் பார்க்கிறார் விஜயகாந்த் என்று எழுதினார்கள். அப்படியானால், கடந்த 40வருடமாக இவர்கள் என்ன செய்தார்கள்? நமது அரசியல்வாதிகள்தான் மக்களுக்காக என்ன செய்து விட்டார்கள்? என்னைவிமர்சிப்பவர்கள் மக்களுக்காக எதையாவது செய்துள்ளார்களா?
எனக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. இந்தி ஒழிக என்று கோஷம் போட்டு படிப்பை பாதியில் விட்டவன் நான்.
இங்கே நிறைய சாதிகளுக்கு சங்கம் உள்ளது, கட்சிகளும் உள்ளன. எத்தனையோ ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்னிடம் உதவிகேட்டு மனு கொடுப்பார்கள். அந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவி செய்யாமல் எதற்காக இத்தனை சங்கங்கள், கட்சிகள்.?
நமது நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது என்கிறார்கள். நான் சொல்கிறேன், நிச்சயமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும். லஞ்சம்யார் வாங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். லஞ்சத்திலேயே ஊறித் திளைத்தவர்களால்தான் அதை ஒழிக்க முடியாது.நம்மால் முடியும்.
ஏதாவது ஒரு வீட்டுக்குப் போய் கூழோ, கஞ்சியோ குடித்து விட்டு நான் வாழ்ந்து விடுவேன். எனக்கென்று எதுவும் வேண்டாம்.அதனால்தான் தைரியமாகச் சொல்கிறேன். லஞ்சத்தை கண்டிப்பாக நம்மால் மட்டுமே ஒழிக்க முடியும்.
நேதாஜி, வாஞ்சிநாதன் போன்றோர் உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். எதற்காக? ஒரு சிலர் சுகபோகமாகவாழத்தானா?நாடு குட்டிச் சுவாரகியுள்ளதற்கு இன்றைய அரசியல்வாதிகள்தான் காரணம்.
நாம் யாருமே வன்முறைக்கு ஆதரவானவர்கள் அல்லர். நமது சுவரொட்டிகளை, பேனர்களை சிலர் கிழிக்கின்றனர். கிழித்துவிட்டுப் போகட்டும், எத்தனை நாளைக்கு அவர்களால் கிழிக்க முடியும்? அவர்களின் கையாலகத்தனத்தையே இது காட்டுகிறது.
முன்னால் இருந்த தலைவர்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஜாதிக் கட்சிகளை, ஜாதி சங்கங்களை தங்களுடன்வைத்துக் கொள்கின்றனர். நம்மிடம் அது நடக்காது.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பதுதான் நமது கோஷம். இதை யாராவது அரசியல்வாதிகள்சொல்லியதுண்டா? தமிழ் தமிழ் என்று கூறிக் கொண்டு திராவிடக் கட்சிகளோடு சிலர் கூட்டு சேருகிறார்கள்.
இந்த அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று அடம் பிடித்து சிலர் வாங்குகின்றனர். அதேபோல பெண்களுக்கு 33 சதவீத இடம்ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற மசோதவை இன்னும் இழுத்தடித்துக் கொண்டுள்ளனர். அதை கொடுப்பதில் அவர்களுக்குஎன்ன தயக்கம்? ஆனால் நான் எனது கட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறேன்.
இன்னொன்று காவிரிப் பிரச்சினை. ஜூன் மாதம் ஆனால்தான் இந்தப் பிரச்சினை நமது அரசியல்வாதிகளுக்கு நினைவுக்கேவரும். அப்போதுதான் சிலர் டெல்லிக்குப் போவர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்பர் சிலர். ஆனால் சொந்தப்பிரச்சினை என்று வந்து விட்டால் மட்டுமே எப்போது வேண்டுமானாலும் டெல்லிக்குப் பறந்து விடுவார்கள். மழை வந்ததும்,நான் சொல்லித்தான் காவிரியில் நீர் வந்தது என்று கதை விடுவர்.
தமிழகத்தில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தைரியமும், சக்தியும் நம்மிடம் உள்ளது. தீர்வு காணும் கட்சியாகஎனது கட்சி விளங்கும் என்றார் விஜயகாந்த்.
பின்னர் வறுமை ஒழிப்பு, நெசவாளர் பிரச்சினைக்குத் தீர்வு, மக்கள் வளமாகவும், நலமாகவும் இருப்பதற்கான திட்டம் உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விஜயகாந்த் தனது பேச்சின்போது தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, பாமகவை மறைமுகமாக சாடியுள்ளார்.ஆனால் அதிமுகவை அதிகம் இதில் இழுக்கவில்லை. இது விஜயகாந்த்தின் அரசியல் அணுகுமுறை குறித்து புதிய கேள்விகளைஎழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications