நக்சல் ஒழிப்பு மாநாடு: ஜெ. டெல்லி பயணம்
சென்னை:
டெல்லியில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள நக்சலைட் ஒழிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட் போன்றமாநிலங்கள் நக்சலைட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.நக்சலைட்டுகளின் தீவிரவாத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு சில புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுதொடர்பாகஆலோசனை நடத்துவதற்காக நக்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில்மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூட்டியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெறும் இக்கூட்டத்தில் கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரம், ஒரிசா, ஜார்க்க்கண்ட், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். முதலில் இந்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம்சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தையும் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஜெயலலிதா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஏற்கனவே அதிகாரிகள் குழு டெல்லி சென்று விட்டது. தமிழக காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக கூடுதல்நிதி கேட்க இந்த கூட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்வார் எனத் தெரிகிறது.
கூட்டம் முடிந்ததும் அன்று மாலையே அவர் சென்னை திரும்புகிறார்.