சட்டசபை காங். தலைவரை மாற்ற இளங்கோவன் கோரிக்கை
கோவை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என மத்திய வர்த்தகத் துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் செயல்பாடுகள் மிக மிக மெத்தனமாகஇருக்கிறது. சட்டசபையில் அவர் செயல்படும் போக்கு கட்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதாக இல்லை. உறுதியாகவும்,ஆணித்தரமாகவும் அவர் வாதம் செய்வதில்லை.எனவே எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை உடனடியாக மாற்றி விட்டு, சட்டசபை காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை உடனடியாக தேர்வுசெய்ய கட்சித் தலைவர் வாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகளை மாற்றுவது புதிதல்ல, ஆண்டுதோறும் நடப்பதுதான்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில், வருகிற சட்டசபைக் கூட்டத் தொடர்தான் கடைசிக்கூட்டமாக இருக்கும். எனவே இந்தக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் வாதத்தை உறுதியாக எடுத்து வைப்பதற்கு வசதியாக,துடிப்பான ஒருவரை தலைவராக நியமிக்க கோருகிறேன்.
அதிமுக அரசின் மக்கள் விரோத அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறை செல்ல காங்கிரஸ்காரர்கள் தயங்கக் கூடாது என்றுஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். அவரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று மற்றவர்களுக்கு வழி காட்டவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கட்சியில் உண்மையான தொண்டர்களுக்கு உரிய மரியாதை, கெளவரம் கிடைப்பதில்லை. இதுகுறித்து வாசன் கவனம் செலுத்தி,கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கட்சி பதவிகளில்அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
சாம்ராஜ்நகர்-சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினை என்று சொதப்பலான காரணத்தைக் காட்டி இத்திட்டம் நிறைவேற அதிமுக அரசு தடையாக இருந்துவருகிறது.
கடந்த 80 ஆண்டுகளாக இந்த ரயில் பாதையை இப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள். எனவே உடனடியாக இத்திட்டம் நடைமுறைக்கு வரமாநில அரசு தனது கருத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் அதிருப்தியை அதிமுக அரசு சம்பாதித்துக்கொள்ள நேரிடும்.
தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதற்கு முன்பாக மக்கள்பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி மக்கள் பிரச்சினைகளை அறிந்து அதை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் வாய்ப்பு உள்ளது. கூட்டணி ஆட்சி குறித்து எனதுஎண்ணத்தை ஏற்கனவே நான் தெளிவாக விளக்கி விட்டேன். இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியனும்இதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உரிய நேரத்தில், உரிய இடத்தில் பேசப்படும்.
விஜயகாந்த் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார் அவ்வளவுதான். காங்கிரஸ் கட்சி ஒரு பேரியக்கம். எனவே விஜயகாந்த் ஆரம்பித்துள்ளகுட்டிக் கட்சியால், காங்கிரஸுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது கேலிக்குரிய விஷயம். நமது நாட்டில் நூற்றுக் கணக்கான குட்டிக் கட்சிகள்இருக்கத்தான் செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட முடியாது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும், விஜயகாந்த் கட்சியில் சேர ரகசிய தூது எதையும் அனுப்பவில்லை. ஆனால் மற்ற கட்சிகளைப் பற்றிஎனக்குத் தெரியாது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications