கோஷ்டி மோதல்: காங். அலுவலகம் பூட்டப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காங்கிரஸ் கோஷ்டி மோதலால், தெற்கு மாவட்ட கட்சி அலுவலகம் பூட்டப்பட்டது. ஒவ்வொரு கோஷ்டியும் ஆளுக்கொருபூட்டாக இரண்டு பூட்டைப் போட்டு அலுவலகத்தைப் பூட்டி விட்டது.
நாட்டின் அனைத்துப் பகுதியிலும் இருப்பதைப் போலவே தூத்துக்குடியிலும் காங்கிரஸ் கோஷ்டி மோதல் உள்ளது. தெற்கு மாவட்டகாங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துக்குட்டி என்பவருக்கும், தற்போதைய தலைவரான ஜஸ்டினுக்கும் இடையே கடும் பூசல் நிலவி வருகிறது.ஜஸ்டினின் போக்கை அவ்வப்போது கடுமையாக கண்டித்து வந்த முத்துக்குட்டி கோஷ்டியினர் ஞாயிற்றுக்கிழமை கட்சி அலுவலகத்திற்குவந்தனர். அங்கிருந்த அனைவரையும் வெளியேறச் சொன்ன அவர்கள் அலுவலகத்தைப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டுச் சென்றனர்.
தகவல் அறிந்ததும் ஜஸ்டின் கோஷ்டியினர் அங்கு வந்தனர். அவர்களும் ஒரு பூட்டைப் போட்டு பூட்டி விட்டுச் சென்றனர். இதனால்அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள் அலுவலகத்தை அலங்கரிக்கும் பூட்டுக்களை வேடிக்கை பார்த்து விட்டுச் செல்கின்றனர்.
இச்சம்பவம் குறித்த முத்துக்குட்டி கூறுகையில், ஜஸ்டின் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகள் கட்சியைவளர்ப்பதற்கு உகந்ததாக தெரியவில்லை. பொறுத்துப் பார்த்து பொறுக்க முடியாமல்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டது.ஜஸ்டினை மாற்றும் வரை நாங்கள் போராடப் போகிறோம் என்றார் முத்துக்குட்டி.