இளங்கோவனுக்கு ஜி.கே.வாசன் மறைமுக எச்சரிக்கை!
சென்னை:
கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை பத்திரிகைள் வாயிலாக சொல்வதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர்இளங்கோவனுக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் கோரியுள்ளதற்குகட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஒருவருக்கு பதவியைக்கொடுப்பதும், பதவியிலிருந்து எடுப்பதும் சோனியா காந்தி மட்டுமே. அவருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, நலன், சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே எனக்கு 2 வதுமுறையாக தலைவர் பதவியை சோனியா காந்தி கொடுத்துள்ளார். அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நான்சிறப்பாக செயல்பட்டு வருகிறேன், வருவேன்.
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், யாருக்குப் பதவி கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்பது குறித்துகட்சிக்குள்தான் பேச வேண்டும், விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து பத்திரிக்கைகள் மூலமாக கருத்துக்களைத் தெரிவிப்பதுசரியல்ல. இது கட்சியின் நலனுக்கு உகந்ததல்ல. இது எனது தனிப்பட்ட கருத்து.
சோனியா காந்தியின் கரத்தையும், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திலும்தான் நமது கவனம் இருக்க வேண்டும். வருகிறசட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ஐனநாயக முற்போக்குக் கூட்டணிக்க பெரும் வெற்றியைத் தேடித் தரும்வகையில் பாடுபட வேண்டும்.
இந்தப் பொறுப்பு தொண்டர்களுக்கு மட்டுமல்ல தலைவர்களுக்கும் உள்ளது. சட்டசபை காங்கிரஸ் தலைவரும், சட்டசபைஉறுப்பினர்களும் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான முறையில்தான் செயல்பட்டு வருகிறார்கள். ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை உரியநேரத்தில், உரிய முறையில் அவர்கள் தட்டிக் கேட்டு வருகிறார்கள், விமர்சித்தும் வருகிறார்கள், அறிவுரையும் கூறுகிறார்கள்.
வரும் சட்டசபைத் தொடரிலும் அவர்கள் தங்களின் ஆக்கப்பூர்வமான பணியைத் தொடருவார்கள், மக்கள் நலனுக்காகதொடர்ந்து உழைப்பார்கள் என்றார் வாசன்.